Ratha Saptami 2026: What is Ratha Saptami?

Ratha Saptami 2026: What is Ratha Saptami?

February 24, 2024priyamvadha b

-- Dr.K.Kumar

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ  பாவ காரியங்கள்  செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும்.

தை முதல் நாள்  தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள்  திதி ரத சப்தமியாகக்  கொண்டாடுகிறோம்.

இந்த  நாளை  சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம்

காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து ஒரு அந்தணன் பசிக்கு  உணவு கேட்க, அதிதி தான கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த அந்தணனுக்கு கொடுத்தாள். இதை தன்  மேல் செய்த உதாசீனம் என்று கோபித்த அந்தணன் ‘உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து பிறப்பான்’ என்று சாபமிட்டான். அதிதி முதலில் வருந்தினாலும், அவர்கள் நல்லுள்ளதின்படி ஒளி மாயமான சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் வரும் ஏழாவது நாள் சப்தமி விரதம் அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும். அன்று ஏழு எருக்கம் இலைகளை, தலையில் ஒன்று (பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதை , ஆண்கள் வெறும் அட்சதை மட்டும் வைத்து), கண்களின் அருகே இரண்டு, தோள்பட்டைகளில் ஒவ்வொன்று, கால்களில் ஒவ்வொன்று  வைத்து ஸ்நானம் செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

மகா பாரத்தின் ஒரு வலிமை வாய்ந்த நாயகன் பீஷ்மர். வீதி வசத்தால் கௌரவர்கள் அணியில் போர் புரிய நேர்ந்தது. பீஷ்மருக்கு அவர் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே. அப்போது அங்கே வந்த வேத வியாசரிடம் ஏன் இப்படி என்று கேட்க, அவர் கூறியது: ‘துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. நீங்களும் அங்கு இருந்தீர். அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் உடல் அளவில் மட்டும் அல்லாது, உள்ளமும் படாத பட்டு. அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும்’

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று வியாசர்  சொல்ல , மெதுவாக பீஷ்மர் ரத சப்தமி அடுத்த நாளன்று சிறிது சிறிதாக தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

எனவேதான் ரத சப்தமி அன்று எருக்க இலை ஸ்நானமும், ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

ரத சப்தமியன்று சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்யவேண்டும்.  தங்கம், வெள்ளி, தாமிரம்  ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வார்த்து தீபம் ஏற்றவேண்டும். கணபதி, குல தெய்வம், மற்றும் சூரிய நாராயண பூஜை செய்து, ஆதித்ய ஹ்ருதயம் (சூரியன் துதி) சொல்லி, அதன் பின் கோயில் சென்று அங்கு நவக்கிரக சூரியனையும் சிவன் பெருமாள் அம்பாள் வணங்கி வர வேண்டும்

அன்று பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பண காரியங்களை செய்ய வேண்டும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். பூஜை முடித்ததும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை,  கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் முதலானவற்றை கடவுளுக்கு நைவேத்தியம் செய்து. முதியோர், நண்பர்கள், உறவினர்,  பசுக்களுக்கு வழங்கினால் வரும் ஏழு சந்ததிக்கு நல்லது சேர்க்கும். தொழில் வியாபாரத்தில் மிக அபிவிருத்தி உண்டாகும்.

ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் திருவிழா நடக்கும்.

சூரியன் என்கிற ஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம்.

உங்கள் அனைவருக்கும், ரத சப்தமி  விரதத்தின் போது அதிக பயன்பெற, சைக்கிள் பியூர்  நிறுவனத்தின்   மனமார்ந்த  நல் வாழ்த்துக்கள்.

More articles